தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற தகுதியுடைய பதிவுதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கு.கலைச்செல்வன் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும், மாற்று திறனாளிகள் 1 ஆண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற ஆண்டு வருமான வரம்பு ரூ.50 ஆயிரம் ஆகும்.
இது வரை இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்காதவர்கள் 30-11-2010-க்கு முன்பு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வழங்கப்படும் இலவச விண்ணப்ப படிவத்தை பெற்று விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த திட்டத்தில் பயன்பெற பள்ளி இறுதி வகுப்புக்கு மேலான கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்று இருக்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு பள்ளி இறுதி மற்றும் அதற்கு கீழ் உள்ள கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஒரு ஆண்டு நிறைவு பெற்று இருக்க வேண்டும்.
வயது வரம்பு தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 45 வயதுக்குள்ளும், இதர வகுப்பினருக்கு 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும், பதிவு தாரர்கள் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவை நாளது தேதி வரை புதுப்பித்து இருக்க வேண்டும்.
விண்ணப்ப படிவத்துடன் வருவாய் ஆய்வாளர் அளவில் வழங்கப்பட்ட தகுதி சான்று, அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் விண்ணப்பதாரர் பெயரில் புதிதாக தொடங்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம், வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகல் ஆகிய ஆவணங்களை இணைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 30-11-2010 வரை அலுவலக நாட்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சமர்ப்பிக்கலாம்.
ஏற்கனவே இந்த திட்டத்தில் உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகள் ஆண்டுக்கு ஒருமுறை சமர்ப்பிக்க வேண்டிய சுய உறுதிமொழி ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும். சுய உறுதிமொழி ஆணவம் சமர்ப்பிக்காதவர்களுக்கு தொடர்ந்து உதவித்தொகை வழங்குவது நிறுத்தப்படும்.இவ்வாறு தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கு.கலைச்செல்வன் தெரிவித்து உள்ளார்.
0 comments
Post a Comment